கொழும்பு – கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள வீட்டில் யுவதி தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
ருக்மல்கம வீதி, விஹார மாவத்தை பகுதியை சேர்ந்த புதம்மினி துரஞ்சா (வயது – 19) என்ற பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
தீக்கிரையான குறித்த பெண்ணின் உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் கூரைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த யுவதியின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக் தோரணங்களை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வௌியே சென்றிருந்த போதே, இவர் தீ விபத்துக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர தீயணைப்பு பிரிவும், அப்பகுதி மக்களும் வருகைதந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.