இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினை பாரம்பரிய விழுமியங்களை பாதுகாத்தல், கலாச்சார வீழ்ச்சியை பாதுகாத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில் பெப்ரவரி 14,15,16 ஆகிய தினங்களில் நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்களின் ஊடாக முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆற்றங்கரைப்பூங்கா (Lagoon park) நேற்று சனிக்கிழமை அழகுபடுத்தி தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்ரினா முரளிதரன், மாநகர ஆணையாளர் தனஞ்செயன் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி. நிசாந்தி அருள்மொழி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் திரு.சசிக்குமார், திருமதி. சதீஸ்வரி, திரு. தயாசீலன் தகவல் நிலைய உத்தியோகத்தர் எம்.ஐ.எம். றம்சி, நிஸ்கோ முகாமையாளர் அருளானந்தம் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் மாவட்டத்தின் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இவ் செயற்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







