ஐசிசி மகளிர் டி20 உலகக்கிண்ணத் தொடரின் குரூப் 2 பிரிவில், தலா 3 வெற்றிகளுடன் தோல்வியுறா பலப்பரீட்சை நடத்தும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (24) லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி குழும மட்டத்தில் முதலிடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படும் நிலையில், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கான நிதி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஐசிசி (ICC), யுனிசெப் பிரிட்டன் (UNICEF UK) மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) ஆகியன இணைந்து லோர்ட்ஸ் மைதானத்தில் விசேட திட்டமொன்றை (Matchday takeover) முன்னெடுக்கவுள்ளன.
யுனிசெப் அமைப்பின் ‘Making Childhood Unstoppable’ மற்றும் ஐசிசியின் ‘Cricket 4 Good’ ஆகிய திட்டங்களின் கீழ் இந்த விழிப்புணர்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, BAFTA விருதுக்கு இருமுறை பரிந்துரைக்கப்பட்ட பிரபல நடிகர் Nabhaan Rizwan மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனை ஈசா குஹா (Isa Guha) ஆகியோர் உலகக்கிண்ணத் திரவியத்துடன் மைதானத்திற்குள் நுழையவுள்ளனர்.
இப்போட்டியின் போது உலகளாவிய ரீதியில் உள்ள ரசிகர்கள் குழந்தைகளுக்கான யுனிசெப் நிதியத்திற்குப் பங்களிக்க முடியும் என ஐசிசி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.