ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவும் வகையில் போலி கடவுச்சீட்டு தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை அலுவல்கள் பிரிவில் மூத்த உதவிச் செயலாளராக பணியாற்றும் 41 வயதுடைய அதிகாரி, மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இவர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டு பிரதிநிதித்துவப் பிரிவின் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய காலத்தில், மற்றொருவரின் அடையாளத்தை பயன்படுத்தி போலி கடவுச்சீட்டு தயாரித்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஒருவரை நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் முன்னெடுத்து வருகிறது.