பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கல்கமுவ – வலஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 60 வயது குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது பற்றி மேலும் தெரியவருவதாது,
குடிசையொன்றில் மனைவியுடன் வசித்து வந்த அவர், சேனை விவசாயியாகவும், கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார். பாரிய வயல்வெளியில் விவசாயம் செய்து வந்ததாகவும், உரம் இல்லாத காரணத்தினால் அவரது நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் மனைவிக்கு முறையாக உணவைக் கூட வழங்க முடியாத அவலநிலையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்துள்ளார். அவரது மனைவி கூறுகையில், கடந்த 29ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து பிரதேச மக்களின் உதவியுடன் தேடிய போது, மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இருந்ததாக குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.