பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் பொரளை, தெமட்டகொடவைச் சேர்ந்த 24, 25 மற்றும் 40 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபர் முன்னதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மூன்று நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறார்.
கடந்த 7 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதுடன், இதில் காயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அவர்களில் இருவர் தற்போது உயிரிழந்த நிலையில், மேலும் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் சுமார் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.