-மூதூர் நிருபர்-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியானது புதுமுக வேட்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை களத்தில் இறக்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார்.
திருகோணமலை -தோப்பூரில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம் பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
பழமையானவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து மீண்டும் அவர்களை பாராளுமன்ற தேர்தலில் களம் இறக்குவதில் அர்த்தமில்லை.புதியவர்களை களம் இறக்குகின்ற போதுதான் இந்த நாட்டில் புதிய அரசியல் கலாச்சார மாற்றத்தை உண்டுபண்ணி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென்பதோடு லஞ்சம், ஊழல், இனவாதமற்ற சிறந்த ஆட்சியை அமைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டை பாரம் எடுத்த பிற்பாடு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்கியுள்ளன.ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், பொது சொத்துக்களை பயன்படுத்தியோர் தற்போது அச்சத்தில் உள்ளனர்.எமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதனை எமது கட்சி முன்னின்று செயற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கையானது நாட்டுக்கு உகந்ததாக உள்ளமையால் தற்போது மக்கள் அவரது செயற்பாட்டை ஆதரித்து பாராட்டி வருவதோடு தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவானது தற்போது நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது.தேசிய மக்கள் சக்தியால் கூட்டத்தை மாத்திரமே கூட்ட முடியும் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 3/2 பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், இதில் அனைவரும் பங்காளிகளாக மாற வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், திருகோணமலையில் மாவட்ட அமைப்பாளருமான அருண் ஹேமச்சந்திரா மேலும் குறிப்பிட்டார்.