-அம்பாறை நிருபர்-
கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரியநீலாவனையில் மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இணைந்து இன்று புதன் கிழமை அஹிம்சை வழி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
குறித்த மதுபானசாலை பாடசாலைமாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறா இருப்பதாகவும் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை எனவும், சிறிய கிராமமான இக் கிராமத்திற்கு இரு மதுபானசாலை தேவையில்லை எனவும் இது எங்கள் சமூகத்தை சீரழிக்கவே ஆரம்பித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரித்தான உன்னிச்சை என்ற விலாசம் கொண்ட லேபல் பொறிக்கப்பட்ட மதுபானசாலையாக அம்பாறை மாவட்டத்தில் இது இயங்குவதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறித்த பிரதேசத்திற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ் வருகை தந்த நிலையில் குறித்த மதுபானசாலை உரிமையாளரிடம் தற்காலிகமாக மூடுமாறும் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும் குறித்த மதுபான சாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரி திணைக்களத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் உறுதி அளித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர் .