-நானு ஓயா நிருபர்-
நுவரெலியா – மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மந்தாரம் நுவர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பு செய்து சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் சென்றவேளை குறித்த சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முயற்சித்தபோது பொலிஸார் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.
இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் நான்கு சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களையும் பின்னர் கைது செய்துள்ளனர்.
புதையல் தோண்ட முற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இதில் தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயடைந்தவர் 41 வயதுடையவர் எனவும் இவர் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மந்தாரம் நுவர பொலிஸார் மற்றும் நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.