பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான திட்டம் எதிர்காலத்தில்
செயற்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டார் .
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் திட்டம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க நேற்று தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அரசியலில் முழுநேர ஈடுபாட்டால் தான் வேலையை இழந்துள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் தனது ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால், தான் வாழ்வதற்கான வருமானம் இல்லாமல் போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அத்தகைய திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதை நிறைவேற்றுபவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறி, அவர் தனது பேஸ்புக் கணக்கில் அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.