பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், 2022ஆம் ஆண்டுக்கான புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், பாடசாலை நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலம் நீடிப்பதற்கு முன்னராக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது.

அத்துடன் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீட்டிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்ளடக்க முடியாத பட்சத்தில், மூன்றாம் தவணையின் போது  சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.