தரம் 01 இல் சேரும் ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபத்தி ஏழாயிரத்து ஐநூறு மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு முன் பாடசாலையை விட்டு விலகுவதாக அண்மையில் இலங்கைப் பாடசாலை மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
மொத்த மாணவர்களில் இது முப்பத்தொன்பது வீதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தரம் 01 இல் 333,448 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டுக்குள் இரண்டு லட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து இருபத்தி மூன்று பேர் மட்டுமே உயர்தரத்தில் படித்துள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறியவர்களில் 46 வீதமானவர்கள் அதாவது எழுபத்தி ஏழாயிரத்து நானூற்று நான்கு ஆண் மாணவர்களும், முப்பத்தொரு வீதமானவர்கள் அதாவது ஐந்தாயிரத்து நூற்று இருபத்தொரு பேர் பெண் மாணவர்களாவர் என்றும் பேராசிரியர் கூறினார்.
முதலாம் வகுப்பிற்குள் நுழையும் எத்தனை மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறுகின்றார்கள் என்பது பற்றிய விசாரணையில் சுமார் முப்பத்தாறாயிரத்து இருநூற்றி இருபத்தெட்டு பிள்ளைகள் சாதாரணதர பரீட்சைக்கு முன்னரே பாடசாலையை விட்டு வெளியேறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சாதாரணதர பரீட்சைக்கு முன்னர் பாடசாலையை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இருபத்து மூவாயிரத்து முன்னூற்று நான்கு அதாவது பதினான்கு வீதமானவர்கள் ஆண்கள். 12 ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி நான்கு அதாவது எட்டு வீதமான மாணவிகள் என வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்தார்.