-மன்னார் நிருபர்-
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல ஆயிரம் கோடி ரூபாவை நிதி உதவியாக இந்திய அரசிடம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, அதற்கு கைமாறாக தமிழக மீனவர்கள் 16 பேரை சிறைபிடித்துள்ளதாக ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வியாழக்கிழமை காலை இராமேஸ்வரத்தில் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறை முகங்களில் இருந்து அரசு மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களையும், மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தமாக 16 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் மீதான இந்த கைது நடவடிக்கையை கண்டித்து இன்று வியாழக்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை நாட்டை மீட்பதற்காக இந்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.
நிதி உதவியை பெற்றுக் கொண்ட இலங்கை அரசு அதற்கு கைமாறாக ஒரே இரவில் 16 மீனவர்களை சிறை பிடித்துள்ளது.
இதற்கு ராமேஸ்வரம் மீனவ சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதுடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து நாளை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முடிவு செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
மீனவர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் உள்ள சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழக் கூடிய சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலாளர்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.