புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தைப் பெற்று (OTP) பண மோசடியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் புத்தளம், பாலாவி மற்றும் கரம்பை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெறுமதியான பரிசில்கள் தருவதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், ஆறு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 25,000 ரூபா பணம் 6 கையடக்கத் தொலைபேசிகள், 9 வங்கி அட்டைகள், சிம் அட்டைகள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.