நாட்டில் நிலவும் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, அத்தனகலு, கிங், களனி, நில்வளா, களு ஆகிய கங்கைகளின் அருகில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும மாத்தறை ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் காற்று மற்றும் மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்ககூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுகிறது, எனவும் விளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.