தோழியின் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி பணத்தைப்பெற்றதாகக் கூறப்படும் 18 வயதுடைய யுவதியும் யுவதியின் காதலனும் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபரான யுவதி கடந்த 20 ஆம் திகதி தனது தோழியின் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் இருவரும் இணைந்து நகரத்துக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, யுவதியின் தோழி தனது ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி 10 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்று ஏ.ரி.எம் அட்டையை தனது கையடக்கத் தொலைபேசியின் அட்டைக்குள் வைத்துள்ளார்.
இதனை அவதானித்த யுவதி, புகைப்படம் எடுப்பதாகக் கூறி தனது தோழியின் கையடக்கத் தொலைபேசியை பெற்றுக்கொண்டு அதிலிருந்த ஏ.ரி.எம் அட்டையைத் திருடியுள்ளார்.
பின்னர், இருவரும் தங்களது வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில், யுவதியின் தோழி தனது ஏ.ரி.எம் அட்டை காணாமல் போயுள்ளதை அறிந்துள்ளார். பின்னர் யுவதியின் தோழி, யுவதியின் வீட்டிற்குச் சென்று அவரது பையை சோதனையிட்ட போது தனது ஏ.ரி.எம் அட்டையைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து, யுவதியின் தோழி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திருடப்பட்டதாகக் கூறப்படும் 310,000 ரூபா பணம் யுவதியின் காதலனிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்