இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பதவியேற்ற நிலையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தது இடம்பெறுவதாக யாழ். மாவட்ட கடற்த்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிளை மரியதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றையதினம் வியாழக்கிழமை யாழ் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதை அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியத்தை வழங்கியமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மீனவர்களுக்காக கடந்த ஆட்சியில் கடத்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா மண்ணெண்ணெய் மானியத்தை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றினார் அவருக்கும் எமது நன்றிகள்.
மேலும் இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரா பதவிக்கு வந்த நிலையில் நல்லெண்ண அடிப்படையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஜனாதிபதியின் நல்லெண்ண செயற்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் நேற்று முன்தினம் புதன்கிழமை மாதகல் கடற்பரப்பில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் எமது மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகளை அறுத்து நாசம் செய்துள்ளனர்.
ஆகவே இந்த செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு இலங்கை ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம் இந்திய அத்துமீறிய மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடையுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.