கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும்போது கையிருப்பாக நாட்டில் 06 பில்லியன் அமெரிக்க டொலர் இருந்தது – இரா.சாணக்கியன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு ‘முகத்தூர் முழக்கம்’மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது.

30 இளைஞர் கழகங்கள் பங்குகொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டில் அட்டைகள் எவ்வாறு இரத்தத்தினை உறிஞ்சி எடுக்குமோ அதேபோன்று இந்த நாட்டு மக்களின் நிதியை களவெடுத்து, நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை விற்பனை செய்து, இந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான அந்நிய செலாவாணியை கொண்டு நாடுகளின் கடனை செலுத்துவதாக கூறி தனது குடும்பத்தின் கடன்களை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நாட்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும்போது கையிருப்பாக இந்த நாட்டில் 06 பில்லியன் அமெரிக்க டொலர் இருந்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரப்போகின்றதுஇ பொருட்களுக்கான தட்டுப்பாடு வரப்போகின்றது என்று தெரிந்தும் இந்த அந்நிய செலவாணியை பயன்படுத்தி அந்த கடனை அடைப்பதற்கான காரணம் அவரின் குடும்பத்தின் வேண்டப்பட்டவருக்கே அந்த நிதியை வழங்கியதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர், இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் கிடைத்துள்ளார்கள். நிதியே இல்லாத நாட்டுக்கு ஒரு அமைச்சர். சிங்கள அமைச்சர்களே இன்று அமைச்சு வேண்டாம் என்று கூறுமளவிற்கு அரசிடம் நிதியில்லாத நிலை காணப்படுகின்றது.

இந்த மிகவும் மோசமாக விமர்சிக்கப்படும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருக்கின்றார். வெட்கம், சூடு, சொறனை இருக்கும் ஓரு ஜனாதிபதி மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருக்கமுடியாது.

சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டவர்களே அமைச்சு பதவிகள் வேண்டாம் என கூறும்போது, எம்மவர்கள் எதற்காக அமைச்சு பதவிகளை எடுக்கவேண்டும்.

நான் நாடாளுமன்றத்தில் 5000 ரூபா பணத்தாளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன் காட்டி பேசியபோது நான் சுயாதீனமாக மக்களுக்காக செயற்படப்போவதாக கூறியவர் இருவாரங்கள் கழிவதற்குள் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

அப்போது நான் 5000 ரூபாய் வழங்கியது சரிதான். அமைச்சுப்பதவியும் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கியதாக கூறப்படுகின்றது.

இந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையில் உள்ள மக்களை தங்களது தவறான வழிநடத்தல்களினால், தவறான தீர்மானங்களினால் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை அழித்து அடுத்தவேளைக்கு உணவில்லாத நிலையினை இந்த நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.