கடந்த ஜூலை மாதம் அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ என்றழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு சந்தேக நபர்களுக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் கடுமையான நிபந்தனைகளின் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்,
சந்தேகநபர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதவான் விதித்தார்.
மேலும் சந்தேக நபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதுருகிரிய பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் அதுருகிரியவில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கிளப் வசந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஒரு பெண் மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உட்பட 18 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கிளப் வசந்தாவின் மரணம் வெளிநாட்டில் இருந்து திட்டமிடப்பட்ட ஒப்பந்தக் கொலை என்பது பொலிஸாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது.