பாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றம் விளக்கமளித்துள்ளது.
அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட தனது தகவல்கள் அடங்கிய படிவத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளடங்கப்படவில்லை என்பதுடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஏற்பட்ட தவறுதல் காரணமாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக கலாநிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறோம்.
மேலும், பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களினதும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு, புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.