நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கம்ப மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தைச் சேர்ந்த எம்.சதாசிவம் (வயது-60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் நேற்று சனிக்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்ட பொன்னர் சங்கர் கூத்து மறுநாள் முடியும் தருவாயில் திறந்தவெளியில் தயார் செய்யப்பட்டிருந்த 50 அடிக்கு அதிகமான உயரமான மரக்கட்டையில் இணைக்கப்பட்ட மர ஏணியில் (கம்ப மரம்) ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கிளாஸ்கோ தோட்டத்தில் ஆண்டுதோறும் இந்த பொன்னர் சங்கர் கூத்து நடாத்தப்படுவதாகவும், இரவு முழுவதும் இடம்பெற்ற நாடகத்தின் பின்னர் காலையில் பொது வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் கம்ப மரத்தில் பெரிய காந்தி எனும் கதாபாத்திரம் அதில் ஏறி சில நிமிடங்கள் தவம் செய்து பூஜை செய்ததன் பின்னர் அதிலிருந்து இறங்குவார் என்றும் அதுபோலவே குறித்த நபர் மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தமை நானுஓயா பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கம்ப மரத்திலிருந்து விழுந்த நபர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.