-யாழ் நிருபர்-
யாழ் – உரும்பிராய் தபால் நிலையத்திற்குள் நாய் ஒன்று உள்நுழைந்த நிலையில் குறித்த நாயை விரட்டுவதற்கு ஊழியர்கள் தவறியதாகவும் இதனால் அங்கு சேவைகளை பெறுவதற்கு சென்றவர்கள் அச்சத்தில் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தெருநாய் கடி மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் பதிவாகி இருந்தன. இருப்பினும் உரிய தரப்புகள் அவற்றில் அக்கறை செலுத்துவதை அவதானிக்க முடியவில்லை.
மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் வீதிகளில் பயணம் செய்யும்போது கட்டாக்காலி நாய்கள் அவர்களை துரத்திச் செல்லவும், கடிக்கவும் செய்கின்றது. அல்லது வாகனங்களுக்கு குறுக்கே வந்து விழுவதாலும், வீதியில் செல்பவர்களை துரத்தி செல்லும்போதும் அவர்கள் பயத்தின் மத்தியில் வாகனங்களை செலுத்தும் நிதானத்தை இழந்து விபத்துக்கள் கூட சம்பவித்தவண்ணம் உள்ளன.
கோப்பாய், நீர்வேலி பகுதிகளில் வீதிகளில் நாய்கள் குறுக்கே ஓடியதால் கடந்த மூன்று நாட்களில் மூன்று பேர் விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுத் திங்கட்கிழமை பருத்தித்துறை வீதி, கோப்பாய் பூதர்மடத்துக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் நாய் குறுக்கே ஓடியதால் நிலைதடுமாறி நாயுடன் மோதி கீழே வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
எனவே உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி கட்டாக்காலி நாய்களை குறைக்கும் அல்லது இல்லாது செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து, வீதிகளில் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக காணப்படுகின்றது.
