-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை மற்றும் உலக தமிழர்களுக்கான தகவல் சேவை மையம் ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எத்தாபெந்திவெவ விகாரையில் நேற்று சனிக்கிழமை காலை 8 மணி முதல் 3 மணி வரை இடம்பெற்றது.
இதன்போது இலவச கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை, பல் பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கான விசேட பரிசோதனை, ஆயுர்வேத வைத்திய சேவை மற்றும் விசேட நோய்களுக்கான சிகிச்சைகள், ஆலோசனைகள் என்பன இந்த வைத்திய முகாமில் இடம் பெற்றது.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி அதீஷ சத்துரங்கவின் வேண்டுகோளுக்கிணங்க உலக தமிழர்களுக்கான தகவல் சேவை மையத்தின் அனுசரணையில் இவ்வைத்திய முகாம் நடாத்தப்பட்டது.
குறித்த வைத்திய முகாமில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் வைத்தியர்களான எஸ். சௌந்தராஜன் மற்றும் என். ரகுராம் மற்றும் மொரவெவ பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கே. சத்தியபிரியா, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். மணிவண்ணன், நிர்வாக கிராம உத்தியோகத்தர் என் சுந்தரேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த இலவச வைத்திய முகாமிற்கு மொரவெவ விமானப்படை வீரர்கள், மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்களால் வைத்தியசாலை தரப்பினருக்கு சரீர உதவிகள் மற்றும் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் நலன் கருதி உலக தமிழர்களுக்கான தகவல் மையத்தினால் சிற்றூண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.


