-யாழ் நிருபர்-
எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 8-10-2024 அன்று கைது செய்யப்பட்டு இலங்கை வாரியபொல சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 35 மீனவர்களையும் விடுவிக்க கோரி அவர்களது குடும்பத்தினர் பாம்பன் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இந்திய தமிழ்நாடு பாம்பனிலிருந்து கடந்த 08-10-2024 அன்று நான்கு நாட்டுப் படகுகளில் 35 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றவேளை இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் புத்தளம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு மீன்பிடி திணைக்களம் ஊடாக புத்தளம் நீதிமன்றில் வழங்கு தொடுக்கப்பட்டு அவர்கள் வாரியபொல சிறையில் 78 நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீன்பிடிக்க சென்ற படகு சாதாரண நாட்டுப் படகுகள் என்றும், ஆனால் தவறுதலாக அது விசைப்படகுகள் என வழக்கு பதியப்பட்டதனாலேயே அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியே இன்றிலிருந்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்தியா தமிழ்நாடு பாம்பன் மீன் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை கைவிடுமாறு தமிழ் நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் அது பலனளிக்காத நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.