இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு எதிராகவும், இலங்கை கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் எனவும் கோரி லண்டனில் புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடு என்பதால் இலங்கை கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
தமிழ் சமூகத்துக்கு இலங்கையில் எந்த உரிமையும் இல்லை என்றும், மனித உரிமைகளை மீறுவதாகவும், இலங்கையை போர்க்குற்றம் இழைத்த நாடு என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.