இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-யாழ் நிருபர், மன்னார் நிருபர்-

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் இலங்கையில் இருந்து 60 இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 15 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கை தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு சென்று இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.

அதேபோல், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு படகுகளில் யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டம் மற்றும் காக்கா தீவை சேர்ந்த யோகன், மாலா, கதிரமலை, ஜெயராம், பேபி ஷாலினி என 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை அதிகாலை 3 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையில் சென்றடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதால் எப்படி வாங்கி சாப்பிட முடியும் எனவும், மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் காய்ச்சல் தலை வலிக்கு 4 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள்.

இதே நிலை நீடித்தால் இலங்கையில் பட்னி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும் எனவே உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்குப் பின் இந்த 15 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.