ஆதார வைத்தியசாலையில் நிதி மோசடி : கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்

-யாழ் நிருபர்-

பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிர்வாக மற்றும் நிதி மோசடி தொடர்பில் மாகாண உள்ளகக் கணக்காய்வு அறிக்கையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதியிலிருந்து கணக்காய்வு மேற்கொள்ளப்பட்ட திகதி வரையான காலப்பகுதியில் குறித்த வைத்தியசாலையில் 22 வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்ட போதும் 10 வேலைத் திட்டங்களுக்கு மட்டுமே வடக்கு மாகாண பிரதம செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான ஒப்பந்த கோவைகள் மற்றும் தொழில்நுட்பத்தினால் சான்று படுத்தப்பட்ட வேலை நிறைவேற்று அறிக்கை கணக்காய்வு குழுவினால் கோரப்பட்ட போதும் சமர்ப்பிக்கப்படாமையினால் குறித்த வேலை தொடர்பான கணக்காய்வினை மேற்கொள்ள முடியாது போனதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி பிரதம செயலாளரினால் அனுமதிக்கப்பட்ட கருத்தின் பிரகாரம் குறித்த வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மூலம் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

எனினும், குறித்த வைத்தியசாலையில் நிர்மான வேலைகளுக்காக அரச சேவை சாராத உத்தியோகத்தர் ஒருவரை பணிக்கு அமர்த்தி மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா வீதம் ஊதியம் வழங்கியமை அம்பலமாகியுள்ளது.

துரித அபிவிருத்தித் திட்டத்தின் கோவில் நடை முறைப்படுத்தப்பட்ட 22 வேலைத்திட்டங்களில் இரண்டு வேலைத்திட்டங்கள் வைத்தியசாலை முகாமைத்துவ குழுவினரின் சகோதரனுக்கு பெறுகை ஒழுங்கு விதிக்கு முரணாக வழங்கியமை கண்டறியப்பட்டது.

2020 ஆம் ஆண்டு வைகாசி மற்றும் ஆனி மாதத்தில் கிடைக்கப்பெற்ற 210 மெத்தைகள் கணக்காய்வு தினமான கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்பரவரி 10 ஆம் திகதி வரை ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்த நிலையிலும் வைத்தியசாலை  பதிவேட்டில் உள்வாங்கப்படவில்லை.

மேலும், வைத்தியசாலையில் இடம்பெற்ற செலவினங்களுக்கு பொருட்கள் தயாரிக்க படாமல் சில செலவினங்களுக்கு மட்டும் வழங்கிய பற்றுச்சீட்டு மட்டும் கணக்காய்வு சமர்ப்பிக்கப்பட்டது .

மேலும், வைத்தியசாலையின் முகாமைத்துவக் குழுக்கென உருவாக்கப்பட்ட யாப்பு அதன் சட்டநீதியான வலுவை கணக்காய்வு செய்யப்பட்ட தினம் வரை உறுதி செய்யவில்லை போன்ற பல விடயங்களை மேற்கோள் காட்டி மாகாண பிரதம உள்ளக கணக்காய்வு அலுவலகத்தினால் மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.