ஆடு திருட்டு சம்பவம் : பெண் கிராம சேவகருடன் மதுபோதையில் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முறுகல்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணவனை இழந்த குறித்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சூழலில் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து வருகிறார்

இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற குறித்த பெண்ணிற்கு சொந்தமான ஆடு ஒன்றினை திருடி இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்தபோது கட்டைக்காட்டில் வைத்து இறைச்சி மீட்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் ஆட்டை இறைச்சிக்காக வெட்டிய இடத்தை கண்டு பிடித்ததோடு சந்தேக நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்து குறித்த இடத்திற்கு சென்ற வெற்றிலைக்கேணி பெண் கிராம அலுவலருடன், மது போதையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தகாத வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டதாக வெற்றிலைக்கேணி  கிராம அலுவலர் குற்றம் சாட்டியுள்ளார்.

கிராம அலுவலருடன் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் மருதங்கேணி பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்