-யாழ் நிருபர்-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனித நேயத்துக்கு சாந்தனின் உறவுகள் நன்றியைத் தெரிவித்தனர்.
அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு வருகை தந்து சந்தித்த சாந்தனின் உறவினர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை தற்கொலை குண்டுதாரியை ஏவி கொலைசெய்த குற்றச்சாட்டில் நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் நாடு திரும்பி தனது தாயாருடன் இறுதிக்காலத்தில் வாழ விரும்பியிருந்த நிலையில் சாந்தன் வீடு வந்து சேர்வதற்கு உதவுமாறு சாந்தனின் தாயாரும் சகோதரனும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து சாந்தன் நாடு திரும்புவதற்கு உரிய ஒழுங்கைகளை செய்வதற்காக அமைச்சரவையிலும் ஜனாதிபதியிடமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
உரிய நடைமுறைகள் நிறுவுற்று சாந்தன் நாடு திரும்பவிருந்த இறுதித் தருணத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தமிழ்நாட்டில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சாந்தன் தமிழ்நாட்டிலேயே மரணமானார்.
பின்னர் அவரது பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான காரியங்களையும் இறுதிவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதவியுடனேயே செய்யப்பட்டது.