
மதங்களால் பிரிவினைகள், வேதனைகள், இழப்புக்கள்தான் அதிகம்: நவரெட்ணம்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மதங்களால் ஒற்றுமையும் சகவாழ்வும் ஏற்படுவதற்குப் பதிலாக பிரிவினைகள், வேதனை, கண்ணீர், இழப்புக்கள்தான் அதிகம் என கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய அடிகளார் ஏ.ஏ. நவரெட்ணம் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வில் கலந்து கொண்ட ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, மற்றும் கத்தோலிக்கரல்லாத சமயங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமதக் குழுச்செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், இளைஞர் யுவதிகள் மத்தியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் பன்மைத்துவ உள்வாங்கல் மூலம் சமூக நியாயத்தையும் இன, மத நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தல் எனும் தெளிவூட்டும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அதிகாரிகளான சாமினி வீரசிறி, முனிப் றஹ்மான், மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் எம்.ஐ. அப்துல் ஹமீட், விளையாட்டு உத்தியோகத்தரும் மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான கே. சங்கீதா, ஆகியோருட்பட இன்னும் பல செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து தெளிவூட்டலைச் செய்த வளவாளர் விரிவுரையாளர் நவரெட்ணம்,
மதங்களின் அடிப்படையில் பிரிவினைகள், சண்டைகள், சச்சரவுகள், கண்ணீரும் கம்பலையும் குழப்பங்களும், வேதனைகளும், கவலையும் அதிகரித்திருக்கிறதே தவிர மதங்கள் மனிதர்களை ஒன்றுபடுத்தத் தவறி விட்டதாகவே கருத முடியும். கேட்பதற்கு இது சங்கடமாக இருந்தாலும் இதுதான் கசப்பான உண்மையாகும்.
பல இனங்கள், பல கலாசார பண்பாடுகள் நிறைந்த பொது வெளியில் தனிப்பட்ட ஒரு சாராரின் மத அடையாளங்களைப் பயன்படுத்தலாமா என்பது இப்பொழுது பேசுபொருளாதக மாறியியிருக்கிறது.
ஏனென்றால் பொதுவெளி என்பது அனைவருக்கும் சொந்தமான இடம். பொதுவெளி குறிப்பிட்ட இன, மத, மொழி பிரிவினருக்கானது அல்ல என்பதால் இந்த சிந்தனை தோன்றியிருக்கிறது. பொதுவெளி எல்லோருக்கும் பொதுவானது. அந்தப் பொது வெளியை குறிப்பிட்ட ஒரு சாரார் மாத்திரம் உரிமை கொண்டாட முடியாது. அது நியாயமானதுதான். எனவே அந்தப் பொதுவெளியை குறிப்பிட்ட ஒரு சாரார் உரிமை கொண்டாட முனையும் போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
தனித்தனி நம்பிக்கைகள் பொதுவெளியில் ஆதிக்கம் செலுத்கின்றபொழுது முறுகல் நிலை தோன்றி வன்முறைகள் உருவாகி அழிவுகள் ஏற்படுகின்றன. இது அமைதிக்குப் பங்கமாக அமைகின்றது” என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்