தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

வவுனியா-பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி (3 வயது) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இருந்து தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் பூவரசன்குளம் நித்தியநகர் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை நிறுத்திவிட்டு தாய் கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த போது விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த தாயார் சிறுமியை காணவில்லை என தேடிய போது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமியை மீட்டு பூவசரன்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, முன்னரே சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.