இறால் வளர்ப்பு திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்யும் நேர்முகதேர்வு : நிறுத்துமாறு எதிர்ப்பு போராட்டம்

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச சமூக மட்ட அமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளினால் இன்று புதன்கிழமை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இறால் வளர்ப்பு திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்யும் நேர்முகதேர்வு இன்று காலை உதவி மாவட்ட செயலாளர் தலைமையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் அங்கு சென்ற போராட்ட காரர்கள் பிரதேச செயலகத்திற்குள் சென்று, தங்களது பிரதேசத்தின் வளங்களை அழிக்கும் செயற்திட்டங்கள் தமக்கு வேண்டாம் எனவும், குறித்த திட்டங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும், அத்துடன் குறித்த தெரிவினை உடன் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதற்கு, அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு கீழ் தான் வருகை தந்ததாகவும்,  கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக இப் பயனாளிகளை தெரிவு செய்யும் திட்டம் இடம்பெறுவதாகவும், உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக போராட்ட காரர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலில் பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்