வவுனியா ‘கெத்து பசங்க’ குழு விசேட அதிரடிப்படையினரால் கைது

வவுனியா-பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் வன்முறை சம்பவங்களை ஏற்பாடு செய்த ‘கெத்து பசங்க’ என்ற குழுவை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை வவுனியா முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் பிரகாரம், பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கெத்து பசங்க என்ற வட்ஸ்அப் குழு தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது.

உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் வவுனியா பிரதேசத்தில் 18 வருடங்களாக வசித்த நால்வரை 04 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.