நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற தங்க நகைக் கொள்ளையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, புத்தளம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற தங்க நகைக் கொள்ளைச் சம்பவத்துடனும் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கமைய, அவர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது கொள்ளையடிக்கப்பட்ட 12 தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பில் நடந்த நகைக் கொள்ளைக்காக அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.