ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவ்பொத்தானை உதவி பொலிஸ் அத்தியாயத்தகர் றுவன் நாராவிடகே  ஆலோசனையின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையின் போது குறித்த சந்தேக நபரின் வீட்டில் இருந்து 16 கிராம் 10 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தானை-நெலுகொள்ளாவ பகுதியில் வசித்து வரும் கபில குமார் த சில்வா (41வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பல தடவைகள் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டிருந்த போதிலும் போதைப் பொருள் கைப்பற்றப்படவில்லை எனவும் தொடர்ச்சியாக குறித்த நபர் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாகவும் இன்றைய தினம் தமது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் போதைப் பொருட்களை மீட்டுள்ளதாகவும்,  மீட்கப்பட்ட போதை பொருளுடன் நாளை  கெப்பித்திக்கொள்ளாவ நீதவான் முன்னிலையில் சந்தேக நபரை ஆஜர் படுத்த உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.