வெள்ளப்பெருக்கு காரணமாக கொழும்பு – புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை பிற்பகல் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் ரயில் மார்க்கத்தில் தில்அடி பகுதியில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், இன்று புதன்கிழமை மாலை மற்றும் நாளை வியாழக்கிழமை புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் புத்தளம் அலுவலக ரயில் மற்றும் ஏனைய அனைத்து ரயில்களும் கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் வரை மட்டுமே இயக்கப்படும். நாளை காலை அந்த ரயில்கள் சிலாபம் ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி தமது பயணங்களை ஆரம்பிக்கும்.
தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, சிலாபம் மற்றும் புத்தளம் இடையிலான ரயில் போக்குவரத்து குறித்து எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.