வெடிபொருட்களுடன் கைப்பற்றப்பட்ட லொறி : விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

பிங்கிரிய – விலத்தவ பிரதேசத்தில் வைத்து வெடிபொருட்களுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட லொறி தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகள் நேற்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு விலத்தவ பகுதியில் வீதித்தடை கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.

கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய 89 குழாய்கள், 80 அடி நீளமுள்ள 21 சர்வீஸ் சரங்கள், தலா 100 டெட்டனேட்டர்கள் பொருத்தப்பட்ட 9 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

33 மற்றும் 44 வயதுடைய மன்னாரை வசிப்பிடமாக கொண்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

மீன்பிடித் தேவைக்காக குருநாகல் பகுதியில் இருந்து இந்த வெடிபொருட்களை தாம் கொண்டு வந்ததாகவும், லொறி மூலம் கொழும்பு பகுதிக்கு கொண்டு செல்வதாகவும் சந்தேகநபர்கள் விசாரணையின போது தெரிவித்துள்ளனர்.