2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும் என என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தற்போது திட்டமிடப்பட்டபடி எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து உயர் நீதிமன்றுக்கு அறியப்படுத்திய போதிலும் ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுவதற்கு அரசாங்கம் இது தொடர்பான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உள்ளூராட்சித் தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படாது என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.