இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் செய்த செயல் : பயணி விசனம்

 

-மன்னார் நிருபர்-

மன்னாரில் இருந்து பயணத்தை மேற்கொள்ள நபர் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் சாலை அலுவலகத்தில் 2 ஆசனங்களுக்கு முன்பதிவு செய்து பற்றுச் சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு கொழும்பு செல்லவே முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பயணி தனது கொழும்பு பயணத்தை மேற்கொள்வதற்காக இரவு 09.10மணியலவில் பஸ் நிலையத்திற்கு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த WD-ND-9511 என்ற இலக்கம் கொண்ட இ.போ.ச பேருந்தில் ஏறி தான் பதிவு செய்த ஆசனத்தில் அமர சென்ற சென்ற வேளை அவர் பதிவு செய்த ஆசனத்தில் ஒரு பெண் அமர்ந்திருந்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த பயணி நடத்துனரிடம் கூறிய போது நீ என்னிடமா ஆசனம் பதிவு செய்தாய்? பதிவு செய்தவனிடம் போய் கேள்? என்று உரத்த குரலில் தகாத வார்த்தைகளால் பேசி பேருந்தை விட்டு கீழே இறங்கு என சாரதியும் நடத்துனரும் மீண்டும் சத்தமாக கூறி இறக்கிவிட்டு சென்றுள்ளார்கள்.

இந்த நிலையில் குறித்த பயணி தனியார் பேருந்து ஒன்றில் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளதோடு,  சம்பவம் தொடர்பாக குறித்த மன்னார் சாலை பேருந்தின் சாரதி நடத்துனருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொது மக்களுடன் நாகரிகமான முறையில் கதைக்க தெரியாத நடத்துனரையும் சாரதியையும் வைத்து கொண்டு இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலை எவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய முடியும் எனவும், இவ்வாறான ஒரு சில சாரதி நடத்துனர்களினால் மனித நேயத்துடன் சேவையாற்றும் எனைய சாரதி நடத்துனர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என குறித்த பயணி ஊடகங்கள் ஊடாக தெரிவித்துள்ளார்.