உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 770 மில்லியன் கோரிக்கை : நிதியமைச்சிடமிருந்து பதிலில்லை

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உரிய பதில் வழங்கப்படாவிடின் உச்ச நீதிமன்றில் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரசாங்க அச்சகத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் போன்றவற்றினால் வாக்களிக்கப் பங்களிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு முற்பணத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், அந்தக் கோரிக்கைகளுக்கு அமைவாக திறைசேரி செயலாளரிடம் அடிப்படைத் தொகையாக 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு வாரங்களாக அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இதனைத் தெரிவித்தார்.