சகோதரியின் நகையை திருடிய இளைஞன் கைது

-யாழ் நிருபர்-

சகோதரியின் 05 பவுண் நகையை திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவர் தனது வீட்டில் இருந்த 05 பவுண் நகை களவு போயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், முறைப்பாட்டாளரான பெண்ணின் சகோதரனை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைத் தண்டனை அனுபவித்து தற்போது விடுதலையாகியுள்ளவர் எனவும், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் நகையை திருடி அடகு வைத்து,  அந்த பணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பவற்றை வாங்கியதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.