ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராடியவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடப்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் யாழ் பல்கலைக்கழ மாணவன் ஆகியோரை இன்று வெள்ளிக்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற கட்டளையை பொலிஸார் இன்று சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கியுள்ளனர்.

கடந்த பொங்கல் தினத்தன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழிப்போராட்டம் இடம்பெற்றது.

பொலிஸார் அதை தடுக்க முற்பட்டபோது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து 17 ஆம் திகதி தவத்திரு வேலன் சுவாமிகள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட காரணத்தை முன்வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருத்தார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி தவணையிடப்பட்டிருத்தது.

இந்த நிலையில்இ வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிட்டா மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவன் மனோகரன் சோம்பாலன் ஆகியோரை யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் கூட்ட உறுப்பினராக இருந்தமை, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு செய்தமை, கல்லால் எறிந்து பொலிஸ் உத்தியோகத்தருக்கு காயம் ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.