8 பேர் வேலை செய்யவேண்டிய இடத்தில் 5 பேர் வேலை செய்வதாக விசனம்

-யாழ் நிருபர்-

வடக்கு மாகாணத்தில் ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை வடக்கு மாகாணசபை அரசாங்கம் வழங்காமல் இருப்பதால் அவர்கள் தமது சேவை நேரத்தை விடுத்து மேலதிக நேரத்தில் சேவைகளை செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் சிவபாலசுந்தரம் கரிஹரன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த குறைபாடானது ஏனைய மாவட்டங்களில் இல்லை. வடக்கு மாகாணத்தில்இ அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த பிரச்சினை காணப்படுகிறது. இதனால் நோயாளிகள் பல்வேறுபட்ட. சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ஒரு மீள்குடியேற்ற பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை. இங்கே நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கிறது.

இந்த வைத்தியசாலை இன்றைக்கு பல்வேறுபட்ட வளர்ச்சிகளை கண்டிருக்கிறது. அதாவது உளநல சிகிச்சை பிரிவு, பொது மருத்துவ வசதிகள், புற்றுநோய் மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியன இயங்குகின்றன.

இந்த வைத்தியசாலைக்கு 8 ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் தேவைப்படுகின்ற இடத்தில் 4 ஆளணிகள் மட்டுமே காணப்படுகின்றது. இந்த மாதம் மேலும் ஒரு ஆளணி எமக்கு கிடைத்துள்ளது.

இரவு பகல் பாராது இவர்கள் பலமணி நேரம் கடமை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகையால் அவர்களுக்குரிய மேலதிக நேர கொடுப்பனவு வழங்க வேண்டும் அல்லது மேலதிக நேரக் கொடுப்பனவை வடக்கு மாகாண நிர்வாகம் வழங்க வேண்டும்.

8பேர் வேலை செய்யவேண்டிய இடத்தில் 5பேர் வேலை செய்வதால் அவர்கள் சனி, ஞாயிறு மற்றும் போயா தினங்கள் உட்பட விடுமுறை தினங்களில் கடமை செய்யமாட்டார்கள். பிற்பகல் நான்கு மணிக்கு பின்னர் கடமையில் ஈடுபட மாட்டார்கள்.

யூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை அவர்கள் மேலதிக நேர கொடுப்பனவு வழங்காமலும் சேவையில் ஈடுபட்டார்கள். ஜனவரி 5ஆம் திகதிக்கு பின்னர் தான் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். அதாவது மேலதிக நேரத்தில் கடமையாற்ற மாட்டோம் என்றும் அவ்வாறு கடமையாற்றுவதாயின் மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி மேலதிக நேர வேலையை இடைநிறுத்தி உள்ளனர்.

எமது வைத்தியசாலையில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்கள் பலர் சேவை பெறுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் 17 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. ஆகையால் இந்த நிலையில் கருத்தில் கொண்டு உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றார்.