தேசிய கிரிக்கெட் அணிக்குள் உள்வாங்கப்பட்டு மாணவிக்கு புதிய வீடு

 

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 வயதின் கீழ் பெண்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணம், சுழிபுரம் – காட்டுப்புலத்தை சேர்ந்த மாணவி கிருசிகாவிற்கு, இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

தியாகி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் இராணுவத்தினரின் சரீர பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இந்த வீட்டிற்கு கடந்த வருடம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த வீடு இன்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் ஸ்வர்ண போத்தொட்டவினால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வீட்டிற்கான காணியினை 30 வருடகால ஒப்பந்த அடிப்படையில் பறாளாய் முருகன் ஆலய நிர்வாகத்தினர் வழங்கி இருந்தனர்.

இந் நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் ஸ்வர்ண போத்தொட்ட, தியாகி அறக்கட்டளையின் நிறுவுனர் வாமதேவ தியாகேந்திரன், யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் வெலகெடர,  513வது காலாட் படைப்பிரிவு கட்டளை தளபதி பிரிகேடியர் ரஸிக், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் அதிபர்,  சங்கானை பிரதேச செயலகத்தினர் மற்றும் இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.