புதிய இலங்கை சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி இடையே பேச்சுவார்த்தை

 

-கல்முனை நிருபர்-

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டலில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தலைமையில் இயங்கும் புதிய இலங்கை சுதந்திர கட்சியுடன் கலாநிதி அன்வர் முஸ்தபாவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தேர்தல் கூட்டமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை புதிய இலங்கை சுதந்திர கட்சி பத்தரமுல்ல தலைமையகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடங்கலாக தேர்தல்களில் கூட்டணி அமைப்பது தொடர்பிலும், நாடுதழுவிய ரீதியாக கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலும், ஊழல், அதிகார துஸ்பிரயோகம், ஏமாற்று இல்லாத ஜனநாயக அரசியலில் ஈடுபடுவது தொடர்பிலும் இருதரப்பும் ஆழமாக கலந்துரையாடியுள்ளனர். இது தரப்பினருக்குமான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் புதிய இலங்கை சுதந்திர கட்சித்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா, பொதுச்செயலாளர் பீ.எம். நினாப், இளைஞர் விவகார செயலாளர் எஸ்.எம். முஸம்மில், கொள்கை விளக்க மற்றும் ஊடக செயலாளர் ஏ.எச். சஹிர்டீன், மகளிர் விவகார செயலாளர் ஏ.எப்.நஸ்ரின் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பலரும் புதிய இலங்கை சுதந்திர கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.