சிறுவன் உள்ளிட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் விடுதலை

-மன்னார் நிருபர்-

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தோடு 14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் கடந்த 7ஆம் திகதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குறித்த 15 பேரூம் இன்று வியாழக்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட 14 இந்திய மீனவர்களும்இசிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்ட 14 வயது சிறுவனும், இவ்வாறு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை தலா ஒரு வருட சிறைத்தண்டனையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து குறித்த மீனவர்களை விடுதலை செய்தார்.

இந்த நிலையில் குறித்த 15 பேரும் மிகிரியாகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் படகு ஒன்றின் உரிமையாளர் இன்று சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது படகை விடுவிக்க கோரி சட்டத்தரணி ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த படகின் உரிமையாளரை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டதோடுஇகுறித்த விசாரணை யை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.