மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

-மன்னார் நிருபர்-

மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் 57 வது அமர்வு இன்று நகர சபையின் தலைவர் என்.அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு இடம்பெற்றது.

இதன் போது மன்னார் நகர சபையில் 6 கட்சிகளை உள்ளடக்கிய 16 உறுப்பினர்கள் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவை ஏகமனதாக முன் மொழிந்து நிறைவேற்றினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  ஆகிய கட்சிகளை சேர்ந்த 16 உறுப்பினர்கள் அமர்வுக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்தனர்.

எதிர்வரும் ஆண்டிற்கான 223 மில்லியன் 4 லட்சத்து 81 ஆயிரத்து 890 ரூபா மன்னார் நகர சபையின் வருடாந்த வருமானத்தைக் கணக்கில் கொண்டு, நகர சபைக்கு உட்பட்ட வட்டார ரீதியாகவும் வட்டார உறுப்பினர்களின் பிரசன்னத்தோடு வட்டார சங்கங்களின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான அமைப்புக்களுடன் கலந்து ஆலோசனையின் பேரில் குறித்த வரவு செலவு திட்டம் மன்னார் நகரத்தின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.