காணி பிடிக்கும் ஆளுநர் நான் அல்ல : அது எனது பணியும் அல்ல

-யாழ் நிருபர்-

 

வடக்கில் காணி அற்ற ஏழை மக்களுக்கு அரச காணியை பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கமே தவிர மக்களின் காணிகளை பிடிக்கும் பணி என்னுடையதில்லை என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகம் முன் அரசியல் கட்சி ஒன்று நடத்திய போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 வருட யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வட மாகாணத்தில் கணி அற்ற மக்களுக்கு அரசகாணி பெற்று கொடுப்பது மந்த கதியிலே காணப்படுகிறது .

வடக்கு மாகாணத்தில் ஆளுநர் என்ற வகையில் மக்களின் தேவைகளை இனம் கண்டு நிறைவேற்றுவதும் நிர்வாகத்தை உரிய முறையில் மேற்கொள்வதும் எனது பணியாக இருக்கிறது.

அதன் அடிப்படையில் வட மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இன்னும் அரச காணி இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு உரிய காணியைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தினுடைய விருப்பம்.

அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான விவரங்களை பிரதேச செயலாளர்கள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி அது தொடர்பான முடிவுகளை எடுக்கவே அவர்களை அழைத்திருந்தோம்.

வடக்கு மாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை உரிய முறையில் அடையாளப்படுத்தாத பலர் இருக்கிற நிலையில் அவர்களின் காணிகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளை ஆளுநர் செயலகம் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறது.

வடக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கம் கையகப்படுத்தும் காணி தொடர்பில் ஆளுநர் இறுதி முடிவெடுப்பதில்லை.

அதைத் தெரிந்தும் ஆளுநர் மக்களின் தனியார் காணிகளை பிடித்துக் கொடுக்கிறார் என தமது அரசியல் தேவைகளுக்காக சிலர் மக்களுக்கு தவறான புரிதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஆகவே சிலர் தமது அரசியல் காரணங்களுக்காக போராட்டம் செய்கிறார்கள் அவர்கள் போராட்டம் செய்யட்டும் நான் மக்களுக்கு தேவையானவற்றை செய்வதை அவர்களால் தடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.