
சீரற்ற காலநிலையால் 200 வருடம் பழமை வாய்ந்த மரம் சரிந்து விழுந்தது
யாழில் சீரற்ற காலநிலையினால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு மரம் சரிந்து விழுந்துள்ளது
யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்ததால் அருகில் இருந்த வீட்டு மதல் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, இரவு 11 மணியளவில் இடம்பெற்றமையினால் வீதியில் யாரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக யாழ்ப்பாண மாநகர சபையினரால் கச்சேரி நல்லூர் பிரதான வீதியானது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு, விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகளை உரிய சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், 200 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த மரத்தினை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் பாதுகாக்க தவறியமையினால் இந்த மரம் வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.
இரவு 11 மணியளவில் இடம்பெற்றமையினால் வீதியில் யாரும் பயணிக்காத நிலையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இதுவே பகல் வேளையிலோ அல்லது சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில் இடம் பெற்று இருந்தால் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கும்.