டுபாய் அரசினால் நாடுகடத்தப்பட்டதன் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 21 குற்றவாளிகள் குறித்து பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில், இலங்கை பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் (Red Notice) விடுக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘மஹவத்தே சாமர’ மற்றும் ‘வனாத்தே குடு துமிந்த’ ஆகியோரும் அடங்குவர்.
அந்நாட்டில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் ‘குடு துமிந்த’ என்பவர், 2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி பொரளையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட மற்றும் மேலும் மூவர் காயமடைந்த சம்பவத்தை வழிநடத்தியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், குடு துமிந்தவின் நெருங்கிய சகாக்கள் ஐவர் நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குழுவில் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரரான மஹவத்தே சாமர என்பவர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரைத் தவிர ஏனைய சந்தேகநபர்களில் பெரும்பான்மையானோர் டுபாயில் கைது செய்யப்பட்டதற்கான காரணம், ஈரான், டுபாய் மீது நடத்திய தாக்குதலைக் காணொளி (Video) பதிவு செய்து, அதனை சமூக ஊடகங்களில் பரப்பியமையாகும்.
இதன்படி, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன், பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுடன் கடவுச்சீட்டை (Passport) மட்டும் வழங்கி இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடுகடத்தப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதுடன், அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் நிலையங்களில் நேற்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.